தருமபுரியில் நவ.25-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
dharmapuri

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும், 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. எனவே தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின் படி நேர்முக தேர்வு அனுப்பப்படும். எனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

dharmapuri ttn

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்பியூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து வித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வி தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர், என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.