தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை!

 
robbery

நாமக்கல் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.கே. நகரை சேர்ந்தவர்கள் கண்ணன் - சசிகலா தம்பதியினர். இவர்கள் இருவரும் நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகள் பிரியதர்ஷினி, நாமக்கல்லில் 2ஆம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சசிகலா திருப்பதிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் கண்ணன் பள்ளிக்கும், அவரது மகள் பிரியதர்ஷினி கல்லூரிக்கும் புறப்பட்டு சென்றுள்ளனர். மாலையில் பணிமுடிந்து கண்ணன் வீட்டிற்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

namakkal

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.