கரூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் நிறுவன பேருந்து மோதல்... 5ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
karur

கரூரில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் ஜவுளி நிறுவன பேருந்து மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது தாய் பலத்த காயமடைந்தார்.

கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி. நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி ரம்யா (29). இவர்களது 10 வயது மகன் இளவிழியன். இவர் கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை ரம்யா, மகன் இளவிழியனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். ஆத்தூர் பிரிவு கரூர் பாலிடெக்னிக் அருகே கரூர் - ஈரோடு சாலையைக் கடப்பதற்காக வாகனத்துடன் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஜவுளி நிறுவன ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து, எதிர்பாராத விதமாக ரம்யாவின் இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியது.

karur

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் இளவிழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரம்யா பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், சிறுவன் இளவிழியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.