வேலூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் - செவிலியர் பலி!

 
accident

வேலூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில்  செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களது மகள் திவ்யா (23). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று திவ்யா, தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வேலூருக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் ரங்காபுரம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திவ்யா வாகனத்தின் மீது பின்னால் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

vellore gh

இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் பிரேமா பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விபத்து பகுதிக்கு வந்த சாத்துவாச்சாரி போலீசார், பலியான திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.