ஆடிப் பிறப்பையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு!

 
textile market

ஆடி மாத பிறப்பையொட்டி ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையிலும் நடைபெற்றது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்தை, மொத்த விலைக்கு ஜவுளியை கொள்முதல் செய்வர். சாதாரண நாட்கிளில் ரூ.1 கோடி வரையிலும், விஷேச நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறும்.

இதனிடையே கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வெளி மாநில மொத்த வியாபாரிகள் மற்றும் உள்ளுர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைந்ததால் வியாபாரம் மந்தமுடன் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆடிமாத பிறப்பையொட்டி நேற்று கூடிய சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்த ஜவுளி வாங்கிச்சென்றனர். இதனால் மொத்த வியாபாரம் 30 சதவீதத்திற்கு மேலாக நடைபெற்றதாகவும்,குறிப்பிட்ட சில ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளதால், சில்லரை வர்த்தகமும் அதிகளவில் நடைபெற்றது. 

textile market

இதுகுறித்து பேசிய ஜவுளிசந்தை வியாபாரிகள், ஆடிப்பண்டிகை சீசன் கடந்த வாரம் முதல் துவங்கி உள்ளதாகவும், இதனால் மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடைபெற்றதாக தெரிவித்தனர். ஆடித்தள்ளுபடி காரணமாக வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானதாக தெரிவித்த வியாபாரிகள், கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆடிப்பண்டிகை காரணமாக தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறிய வியாபாரிகள், ஆடி மாதம் முழுவதும் கோவில் விசேஷங்கள் உள்ளதால், காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.