கன்னியாகுமரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை - போலீசார் விசாரணை!

 
dead

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மணிகட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் மனைவி முத்துலட்சுமி (60). இவரது கணவர் இறந்த நிலையில், மகன் கோபி (21) உடன் வசித்து வந்தார். மேலும்,  மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற முத்துலெட்சுமி பின்னர் வீடு திரும்பிவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி மணிக்கட்டி பொட்டல் பகுதியில் தோப்பில் சடலமாக கிடந்தார்.

kumari

தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, முத்துலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் காயங்கள் இருப்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பேரில் மணிகட்டி பொட்டலை சேர்ந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.