சூலூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது!

 
cannabis

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக, சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார்,  கண்ணம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளபாளையம் - பாப்பம்பட்டி ரோட்டில் உள்ள ஒட்டல் முன் சந்தேகதிற்கு உரிய விதமாக நின்று கொண்டிருந்த பிடித்து சோதனை செய்தனர்.

sulur

அப்போது, அவர் ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் சிங் (36) என்பதும், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அந்த நபரை  கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6 கிலோ அளவிலான 1,270 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தொடர்ந்து, மனோஜ் குமார் சிங்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.