திருமணமான 8 நாளில் புது மணப்பெண் தற்கொலை... விருத்தாச்சலம் அருகே சோகம்!

 
virudhachalam

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருமணமான 8 நாளில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள புதுக்கூரை பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று குளிக்க செல்வதாக கூறிவிட்டு சந்தியா தனது அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்துச்சென்று பார்த்துள்ளனர். அப்போது, சந்தியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். 

suicide

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 8 நாளில் சந்தியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.