கோவை அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை... மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
murder

கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் சரோஜினி (79). இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், இருவரும் திருமணமாகி பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால், மூதாட்டி சரோஜினி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சரோஜினியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூதாட்டி கை, கால்கள் மற்றும் வாய் ஆகியவை டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

coimbatore gh

மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து அவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சரோஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.