கம்பத்தில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்தவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

 
dead

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சக்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தேவசியா(52). இவர் கடந்த 22ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் தேவசியாவின் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

cumbum
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறைக்கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, தேவசியா படுக்கையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தேவசியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.