ஆம்பூரில் மின்சாரம் தாக்கி நகராட்சி தூய்மை பணியாளர் பலி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மின்சாரம் தாக்கி நகராட்சி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நியூ பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (28). இவர் ஆம்பூர் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஜெயராஜ் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் மாடி பகுதியில் குளித்துவிட்டு மீதமிருந்த தண்ணீரை கீழே ஊற்றியுள்ளார். அப்போது, மாடியின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது தண்ணீர் பட்டதில் ஜெயராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜெயராஜின் மனைவி குமாரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.