கொடைக்கானலில் நகராட்சி ஊழியர் அடித்துக்கொலை... சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!

 
kodaikanal

கொடைக்கானலில் சொத்து தகராறில் தந்தையை உருட்டு கட்டையால் அடைத்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலையை சேர்ந்தவர் நடராஜன் (55). இவர் கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், தினேஷ் (27) என்ற மகனும் உள்ளனர். ஜெயலட்சுமி திருமணமாகி கேரளாவில் கணவருடன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், தினேஷ் சொத்துக்களை தனது பெயருக்கு எழுதித்தர கோரி தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

kodaikanal

இதற்கு அவரது அக்கா ஜெயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி சொத்து பிரச்சினை தொடர்பாக ஜெயலட்சுமி, தினேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த தினேஷ், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து தந்தை நடராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.