தாராபுரம் அருகே தாய் - மகள் தூக்கிட்டு தற்கொலை... வறுமையால் விபரீத முடிவு!

 
suicide

தாராபுரம் அருகே குடும்ப வறுமையால் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி பூங்கொடி(28). இவர்களது மகள் வர்ஷா(10). தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த காளிதாஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பூங்கொடி, அலங்கியம் பகுதியில் உள்ள தனது தாய் சரஸ்வதி வீட்டில் வசித்து வந்தார். சிறுமி வர்ஷா, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

dharapuram

தாராபுரத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பூங்கொடி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியாதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூங்கொடி குருப் 4 தேர்வினை எழுதியுள்ளார். நேற்று காலை சரஸ்வதி வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த பூங்கொடி, மகள் வர்ஷா ஆகியோர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த சரஸ்வதி மகளும், பேத்தியும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த அலங்கியம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது  உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.