ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,579 இடங்களில் மெகா தடுப்பூ முகாம்... ஆர்வமுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்!

 
vaccine

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.  

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

vaccine camp

இதேபோல், 18 வயதுக்கு மேற்பட்ட 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இன்றைய முகாமில்  1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்களும், 70 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். குறிப்பாக இன்றைய முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். இந்த மாதத்துடன் இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.