திண்டுக்கல் அருகே காரில் குட்கா கடத்திய நபர் கைது... 270 கிலோ குட்கா பறிமுதல்!

 
dgl

ஓசூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு காரில் குட்காவை கடத்திச்சென்ற நபரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து 270 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் அம்மைய நாயக்கனூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

dindigul

இதையடுத்து, தனிப்படை போலீசார் காரில் இருந்த 270 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தியது தொடர்பாக கார் ஓட்டுநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (29) என்பவரை கைதுசெய்து, அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சிவகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.