சங்கரன்கோவில் அருகே ஆட்டோவில் குட்கா கடத்திய நபர் கைது; ரூ.26 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!
சங்கரன்கோவில் அருகே ஆட்டோவில் குட்கா கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.26 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பன்குளம் சந்திப்பு பகுதியில், அய்யாபுரம் காவல் ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, ஆட்டோவை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த ஆட்டோவில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டத.
இதனை தொடர்ந்து, ஆட்டோவில் இருந்த ரூ.26,160 மதிப்பிலான 72 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், இவற்றை கடத்தியது தொடர்பாக ஆட்டோ உரிமையாளர் களப்பாகுளம் பகுதியை சேர்ந்த பேச்சி முத்து மகன் கருப்பசாமியை (25) கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ், ரவி, காளிராஜ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.