நாகர்கோவிலில் நிலத் தரகர் கத்தியால் குத்திக்கொலை - போலீசார் விசாரணை!

 
Murder

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிலத் தரகரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு (57).  நில தரகர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து, சேவியர் பாபு,  நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சேவியர் பிரபு, தனது நண்பரான செல்வராஜ் என்பவருடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சேவியர் பாபுவை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

kottar

அப்போது, சேவியர் பாபுவுக்கும், அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேவியர் பாபுவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரை காப்பாற்ற முயன்ற செல்வராஜும் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் போலீசார், சேவியர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சேவியர் பாபுவை கொலை செய்தது, நாகர்கோவில் ராணிதோட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (33) என்பதும், அவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவான சுபினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.