காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.44 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

 
kanchi

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் கோரியும், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதிய தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கோரியும் 255 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

kanchi

தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் குறுவட்டம் கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.5.65 லட்சம் மதிப்பில் SECC திட்டத்தில் வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட திருப்புக்குழி, சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ.38.97 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமுக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.