திண்டுக்கல் கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கொசவபட்டியில் உள்ள புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் காளையாக, கோவில் காளை அவிழ்த்து விட்டப்பட்டது.

Jallikattu

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் சீறி பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை அச்சப்படுத்தின. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், இருவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.