10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : திண்டுக்கல் மாவட்டத்தில் 73,903 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்!

 
exam

திண்டுக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுதுதேர்வை 22 ஆயிரத்து 75 மாணவ , மாணவிகள் எழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி, திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வுகள் நாளை  முதல் வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகள் 85 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வர்களுக்காக தனியே 3 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. இடைநிலை பொதுத்தேர்வுகள் மொத்தம் 113 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வர்களுக்காக தனியே 5 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது.

dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினை 212 பள்ளிகளில் பயிலும் 10, 646 மாணவர்கள் மற்றும் 11,429 மாணவிகள் மொத்தம் 22,075 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு தேர்வினை 215 பள்ளிகளில் பயிலும் 12,020 மாணவர்கள் மற்றும் 12,447 மாணவிகள் மொத்தம் 24,467 தேர்வர்கள் எழுதவுள்ளனர். மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இடைநிலைப் பொதுத் தேர்வினை 14,117 மாணவர்கள் மற்றும் 13,244 மாணவிகள் மொத்தம் 27,361 தேர்வர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுகளை கண்காணிக்க நிலையான படையினரும், பறக்கும் படையினரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி தெரிவித்தார்.