துவரங்குறிச்சி அருகே இடியாப்ப வியாபாரி அடித்துக்கொலை... மனைவி, கள்ளக்காதலன் கைது!

 
murder

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இடியாப்ப வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராமர் (40). இவர் சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை சாலையோரத்தில் ராமர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

dead

இந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இதனிடையே ராமரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவரை தாக்கிய நபரை கைது செய்யவும் வலிலயுறுத்தி உறவினர்கள் துவரங்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போலீசாரின் விசாரணையில் ராமர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் ராமரிடம் தொழிலாளியாக பணிபுரிந்த, அதே பகுதியை சேர்ந்த அருள்குமார் (20) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அருள்குமார், அவரை அடித்துக்கொன்றது தெரியவந்தது. 

arrest

மேலும், போலீசாரின் விசாரணையில் ராமரின் மனைவி கண்மணிக்கும் (30), அருள்குமாருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ராமர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து கண்மணி, காதலன் அருள்குமாரிடம் கூறிய நிலையில், சம்பவத்தன்று அருள்குமார், இது குறித்து ராமரிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருள்குமார், ராமரை இரும்பு கம்பியால் தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து, துவரங்குறிச்சி போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.