சேலத்தில் நவ. 26-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
collector

சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வரும் 26ஆம் தேதி சேலம் பத்மவாணி கலை, அறிவியல் கல்லுரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இம்முகாமில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

jobs

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு  jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

எனவே பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.