சேலம் மாவட்டத்தில் நவ.26-ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் கார்மேகம் தகவல்!

 
slm

சேலம் மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டங்களின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 293 முன்னணி நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,362 நபர்கள் பணி வாய்ப்புகள் பெற்று அதற்குரிய பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

jobs

இந்த ஆண்டும் சேலம் மாவடடத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 26ஆம் தேதி அன்று ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு,  ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்கள் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகை தரும் வேலைநாடுநர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கிட உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட வேலைநாடுநர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன, இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, துணை இயக்குநர்(மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்), மணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.