மொடக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் சுகாதாரக் கேடு... பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நேரில் ஆய்வு!

 
moda

மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை சேமூர் பகுதியில் தனியார் கோழிப் பண்ணையில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி நேரில் ஆய்வுசெய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை சேமூர் பகுதியில் தனியார் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் நிலவும் சுகாதார கேட்டினால், சுற்றுவட்டார பகுதிகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் கோழிப் பண்ணையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணையை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கதாகவும், பொதுமக்கள் சார்பில் குழு அமைத்து, கோழி பண்ணையில் சுகாதாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

moda

இந்த நிலையில், முன்பு இருந்ததை விட தற்போது  ஈக்கள் தொல்லை அதிகரித்து உள்ளதாக கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மொடக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் இன்று பூந்துறை சேமூர் மாரியம்மன் கோயில் திடலில், அந்த பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கோழிப் பண்ணையால் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சமைத்து வைத்துள்ள உணவுகளில் ஈக்கள் விழுந்து சுகாதார கேடு நிலவுவதாகவும், இதனால் தூங்க முடிவதில்லை என்றும் கூறினர். கால்நடைகள் மற்றும் வீடுகளில் குவியல் குவியலாக ஈக்கள் தொல்லை உள்ளதாகவும், கோழிப்பண்ணைக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் எம்எல்ஏவிடம் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

moda

தொடர்ந்து, பண்ணை அருகில் உள்ள வீடுகளில் எம்எல்ஏ சரஸ்வதி ஆய்வுசெய்தபோது, வீடுகளில் ஏராளமான ஈக்கள் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ சரஸ்வதி கூறியதாவது: வரும் 15-ம் தேதி மாலை 3 மணியளவில் மொடக்குறிச்சி வட்டாட்சியர்  அலுவலகத்தில், சுகாதாரம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு, அனைத்து அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் கோழி பண்ணையை சுகாதாரமாக பராமரிக்கா விட்டால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். எம்எல்ஏ ஆய்வைஒட்டி, அந்த பகுதியில் அரச்சலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.