தருமபுரி அருகே மினிவேனில் கடத்திய ரூ.3.26 லட்சம் குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

 
arrest

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியில் மினிவேனில் கடத்திய ரூ 3.26 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வேன் ஓட்டுநரை கைது செய்தனர். 

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்ட அள்ளி நோக்கி சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட மினி சரக்கு வேனை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாராணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மினிவேனை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, வேனில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் பொருட்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

police

தொடர்ந்து, வேனில் இருந்த ரூ.3.26 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் இம்ரானை (24) கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெங்களுரில் இருந்து தேன்கனிகோட்டை வழியாக சேலத்திற்கு குட்காவை கடத்திச்சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, பஞ்சப்பள்ளி போலீசார் இம்ரானை கைதுசெய்து  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய சந்தோஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.