ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா போட்டியிடுவது குறித்து ஜி.கே.வாசன் முடிவு செய்வார் - ஈரோட்டில் விடியல் சேகர் பேட்டி!

 
vidiyal sekar

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது குறித்து ஜி.கே.வாசன் முடிவு செய்வார், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி உடல் நல குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.காவும் போட்டுயிட்டன. இதனால், இம்முறையும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது அதிமுக - திமுக நேரடியாக வேட்பாளர்களை களத்தில் இறக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், அதிமுக சார்பில் கிழக்கு தொகுதி தேர்தலுக்கான நிர்வாகிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

gk vasan

இது குறித்து த.மா.கா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:- கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த த.மா.கா-வுக்கு, ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒடுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி, த.மா.காவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி, கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அதிமுகவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அதிமுக, த.மா.கா, பாரதி ஜனதா ஆகிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. 

ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அதிமுக தலைமையில் திமுக அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள், இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.  இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.