மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - தேனி ஆட்சியர் முரளிதரன் தகவல்!
மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் தேர்வுக்கு விண்ணப்பத்த தேனி மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வாணையத்தால் 24,369 பணிக்காலியிடங்களுக்கான (Staff Selection Commission) கான்ஸ்டபிள் GD தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30 ஆம் தேதி ஆகும்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. தேர்ந்த வல்லுனர்களை கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
10ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடைய மனுதார்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 23 வரை. ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வு உண்டு. எனவே விருப்பமுள்ள மனுதாரர்கள் https://ssc.nic.in என்ற இணைய முகவரியில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்திட வேண்டும்.
அவ்வாறு தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்கள் தேனி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 63792 68661 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.