ராமேஸ்வரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மீனவர் கைது... 30 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

 ராமேஸ்வரத்தில் கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 30 கிலோ கஞ்சாவை மீட்டு விற்பனை செய்ய முயன்ற மீனவரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச்சென்ற கஞ்சா பொட்டலங்களை கடத்தல்காரர்கள் கடலில் வீசியதாகவும், அதனை மீனவர் ஒருவர் மீட்டு பதுக்கிவைத்து விற்பனை செய்வதாகவும், ராமேஸ்வரம் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மீனவர் ஜெனாதன்(40) என்பவர் கஞ்சாவை மீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அதே பகுதியில் மணலில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். 

arrest

இதுதொடர்பாக ஜெனாதனை கைது செய்த தனிப்பிரிவு போலீசார் அவரை ராமேஸ்வரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கடந்த 16ஆம் தேதி ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் மீன்பிடித்தபோது கடத்தல்காரர்கள் கடலில் வீசிய கஞ்சாவை கைப்பற்றியதாகவும், அதனை தனது நண்பரான குணசேகரன் என்பவருடன் சேர்ந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.