ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி... நீச்சல் கற்றுக்கொடுத்தபோது நிகழ்ந்த சோகம்!

 
drowned

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது தந்தை, மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (33). தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், பிரஷீதா (11) என்ற மகளும்,  பிரவிஷ் (9) என்ற மகனும் உள்ளனர். பிரவிஷ் அங்குள்ள அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறையில் வீட்டில் இருந்த பிள்ளைகளை, ராஜா நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக அருகில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கிணற்றின் மேலே பிரியாவும், பிரஷீதாவும் நின்ற நிலையில், ராஜாவும், பிரவிஷும் கிணற்றில் இறங்கி நீச்சல் பழகி உள்ளனர்.

dead

அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் கரையேர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கண்ட பிரியா கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கு வந்த கிராமத்தினர் கிணற்றில் இறங்கி தேடியபோது, அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, ராஜா, சிறுவன் பிரவிஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தாரமங்கலம் போலீசார், அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி தந்தை- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.