குளித்தலையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 
poison

கரூர் மாவட்டம் குளித்தலையில் குடும்ப தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவரது மகன் தர்மேந்திரன்(39). விவசாயி. இவரது மனைவி சத்யா (38). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா அவரை பிரிந்து, பிள்ளைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் தர்மேந்திரனுக்கு, ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

kulithalai

இதனை அறிந்து ஆத்திரமடைந்த சத்யா, கணவர் தர்மேந்திரன் மீது நேற்று குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சத்யா மற்றும் தர்மேந்திரன் குடும்பத்தினரை நேரில் அழைத்து, போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து, அனைவரும் வீட்டிற்கு சென்ற நிலையில், தர்மேந்திரன் காவல் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தர்மேந்திரனின் தந்தை சித்தார்த்தன் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.