ஏலச்சீட்டு பணத்தை தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

 
poison

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே ஏலச்சீட்டு பணத்தை தராததால் வேதனையில் விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுதாஸ். இவர் மாடுகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பொன்னுதாஸ், உப்புவாணியமுத்தூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் இணைந்து பணம் கட்டி வந்துள்ளார். பின்னர் அவரை ஏலச்சீட்டு பணத்தை கேட்டபோது, மாரியப்பன் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொன்னுதாஸ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வெள்ளங்குளியில் உள்ள காட்டுபகுதியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரவநல்லூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

arrest

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் தனது தற்கொலைக்கு மாரியப்பன் தான் காரணம் என தெரிவித்து இருந்தார். அதன் பேரில், போலீசார் மாரியப்பனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீட்டு பணத்தை தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.