திமுக கவுன்சிலருக்கு ஈரோடு மேயர் கடும் எச்சரிக்கை... மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!

 
mayor

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆதிஸ்ரீதரை, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கடுமையாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி 8-வது வார்டு உறுப்பினர் திமுகவை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தனது வார்டில் கடந்த 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்பும் இல்லை என கூறிய ஆதி ஸ்ரீதர், பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய போதும், அதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் பதில் இல்லை என்று கடுமையாக சாடினார்.  அப்போது பேசிய மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் யாரோ தூண்டிவிட்டு நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று குறிப்பிட்டார். 
erode mayor

தொடர்ந்து, துணை மேயர் செல்வராஜ் பேசுகையில், சிலருடன் சேர்ந்துகொண்டு கவுன்சிலர் தனக்கு எதிராகவே தேவையின்றி புகார் செய்தார் என்றும், அவரது வார்டில் பள்ளிச்சுவர் இடிந்தபோது கூட தானே சென்று சரிசெய்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் திமுக கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், தனது இருக்கையிலிருந்து கீழே இறங்கி வந்து, முதல் வரிசையில் உள்ள ஆதி ஸ்ரீதரிடம் சென்று ஆளும்கட்சி உறுப்பினர் போல் நடந்து கொள்ளுங்கள் என்றும், தேவையின்றி பேச வேண்டாம் எனறும் கடுமையாக எச்சரித்தார். பின்னர் மற்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்து, அவரை இருக்கைக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.