ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தில் 3 புதிய எண்ணெய் வகைகள் அறிமுகம்!

 
purna

ஈரோடு எஸ்.கே.எம் பூர்ணா நிறுவனத்தின் சார்பில் 3 புதிய எண்ணெய் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு எஸ்.கே.எம் பூர்ணா நிறுவனத்தில் ரீபைண்ட் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கு எண்ணெய் புதிய வகை எண்ணெய் வகைகள் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், எஸ்.கே.எம் கால்நடைத்தீவன நிறுவன மேலாண்மை இயக்குநர் சந்திரசேகர், இயக்குநர் ஷியாமளா ஷர்மிளி, நிர்வாக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணா ஆகியோர் 3 புதிய வகை எண்ணெய் வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தினர். 

இதைத் தொடர்ந்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஈரோடு எஸ்கேஎம் கால்நடைத்தீவன நிறுவனம், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பூர்ணா என்ற பெயரில் சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு, இதயத்திற்கு உகந்த, ஆரோக்கியமான அரிசி தவிட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ரைஸ் பிரான் ஆயிலை முதன்முதலில் சந்தையில் அறிமுகம் செய்தது. அதற்கு பின்னர் சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் சந்தன மணம் கமழும் பஞ்ச தீப விளக்கேற்றும் எண்ணெய் அறிமுகம் செய்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விற்பனை செய்தும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். 

purna

தற்போது, எஸ்.கே.எம் பூர்ணா சமையல் எண்ணெய் வகைகளில் சுத்திகரிக்கப்பட்ட(ரீபைண்ட்) தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய புதிய எண்ணெய் வகைகள் அறமுகம் செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ரூ.10, ரூ.100 விலை உள்ள பாக்கெட்டுகளிலும், 2 மற்றும் 5 லிட்டர் கேன்களிலும், 15 கிலோ மற்றும் 15 லிட்டர் டின் ஆகிய அளவுகளில் சந்தையில் கிடைக்கும். கடுகு எண்ணெய் 200 மி.லி, 500 மி.லி, 1 லிட்டர் அளவுகளிலும், விளக்கெண்ணெய் 200 மி.லி அளவிலும் கிடைக்கும். 

உக்ரைன் -  ரஷ்யா போர் காரணமாக சூர்யாகாந்தி எண்ணெய் இறக்குமதியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்த எண்ணைய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை இரண்டு மடங்கு உயர்ந்தது. வரும் காலத்தில் சூர்யகாந்தி எண்ணெயை மட்டுமே நம்பி இருக்காமல் அதற்கு மாற்றாக சமையல் எண்ணெய் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை தயாரித்து சந்தைப்படுத்தி உள்ளோம். இந்த எண்ணெய் தயாரிப்பு மூலம் வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி அளவை குறைக்க முடியும். மேலும் தேங்காய் தேவை அதிகரித்து நம் நாட்டில் உள்ள தென்னை விவசாயிகள் பலன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.