ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடக்கம்!

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரசை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா உடல்நல குறைவு காரணமாக கடந்த 4-ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், படங்கள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடி மையங்களில், 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அவை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. 

collector

இந்த நிலையில் இடைத்தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெங்களூரிலிருந்து வந்த பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர், முதற்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி கூறியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிட்டன. கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. தேவைப்பட்டால் இவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைப்படி நடந்து வருகிறோம். 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கண்காணிப்பு குழு, நிலை குழு, பறக்கும் படை அமைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும். தேர்தல் ஆணையம் இது குறித்து மேலும் ஆலோசனை வழங்கினால், அது அதற்கு தகுந்தார் போல் செயல்படுவோம், இவ்வாறு அவர் கூறினார்