வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 10.29 லட்சம் வாக்காளர்கள்!

 
tvr

திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 10,29,129 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான காயத்ரி கிருஷ்ணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, 2023 ஜனவரி 1ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கத்திருத்தம் 2023 தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது.

அதன்படி,  திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 1,15,056 ஆண் வாக்காளர்களும், 1,19,928 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,34,988 வாக்களர்கள் உள்ளனர்.   மன்னார்குடி தொகுதியில் 1,21,463 ஆண் வாக்காளர்களும், 1,28,952 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,50,423 வாக்களர்கள் உள்ளனர். திருவாரூர் தொகுதியில் 1,34,147 ஆண் வாக்காளர்களும், 1,41,992 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,76,167 வாக்களர்கள் உள்ளனர்.  நன்னிலம் தொகுதியில் 1,32,993 ஆண் வாக்காளர்களும், 1,34,538 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,67,551 வாக்களர்கள் உள்ளனர். ஆக மொத்தம் 5,03,659  ஆண் வாக்காளர்களும், 5,25,410 பெண் வாக்காளர்களும், 60 இதர வாக்காளர்களும் என மொத்தம் 10,29,129 வாக்களர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

voter id card

வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதேபோல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தொடர்புடைய வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரே பிறந்தவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்த உடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். பெயர் நீக்கம், பெயர் அல்லது முகவரியில் திருத்தம் மேற்கொள்ள , அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் திருவாரூர் மாவட்ட்ததில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எதிர்வரும் நவ.12, 13, 26 மற்றும் 27 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை விண்ணப்பம் பெறப்படும். வாக்காளர் பட்டியலை https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். மேலும்,  www.nvsp.in என்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.