திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை... துறையூர் அருகே சோகம்!

 
dead

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர்  நல்லம்மாள். இவருக்கு நடராஜன் என்ற மகனும், தமிழ்செல்வி (36) என்ற மகளும் உள்ளனர். தமிழ்செல்விக்கு பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் அமையவில்லை. இதனால் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். மேலும், திருமணமாகாததால் வாழ்வில் விரக்தியுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்ககாக வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எனினும் தமிழ்செல்வி கிடைக்கவில்லை.

thuraiyur

இந்த நிலையில், நேற்று உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் பெண் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த  உப்பிலியபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த பெண் தமிழ்செல்வி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, உப்பிலியபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.