சூலூரில் ஆளுநரின் உருவ படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்!

 
cbe

கோவை மாவட்டம் சூலூரில்  ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், ஆளுநரின் உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்த நிலையில், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநரின் செயலுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

cbe

இந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை மாவட்ட சூலூர் கலங்கல் சாலை சந்திப்பு பகுதியில் ஏராளமான திமுகவினர் திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி முழக்கமிட்டனர். மேலும், ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷமிட்டனர். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ படத்திற்கு தீ வைத்து எரித்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திமுகவினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.