நெல்லையில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது!

 
rape

நெல்லையில் செங்கல்சூளையில் வைத்து 40 வயது பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஒட்டுநர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர் நெல்லைக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முருகன்(44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது, முருகன், அவரை அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

arrest

பின்னர் முருகன் மற்றும், அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி துன்புறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து அவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தர்.

அதன் பேரில், போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், அவரது நண்பர்கள் மணிகண்டன்(32), பேராச்சி(31), மகாராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை இழந்த பெண்ணை, நண்பர் உள்ளிட்ட  4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.