ஈரோட்டில் குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
drowning

ஈரோட்டில் குளத்தில் மூழ்கி அரசுப் பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). இவர் மாணிக்கம் பாளையம் அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம்போல் ஹேமச்சந்திரன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். பள்ளிக்கு சென்று விசாரித்தபோது ஹேமச்சந்திரன் மாலை பள்ளி முடிந்ததும் கிளம்பி சென்றது தெரிய வந்தது.

erode gh

இதனால் அவரது பெற்றோர் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹேமச்சந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தின் அருகே பள்ளி மாணவரின் சீருடை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வீரப்பன் சத்திரம் போலீசார் மற்றும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் இறங்கி தேடினர். நேற்று அதிகாலை 1 மணியளவில் குளத்தில் மாணவன் ஹேமச்சந்திரன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் பள்ளி முடிந்ததும் ஹேமச்சந்திரன் கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றதும், அங்கு ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.