சென்னிமலை - திண்டல் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா!

 
dindal

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சென்னிமலை மற்றும் திண்டல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கடந்த 26 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, 4 ராஜ வீதிகளிலும் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார். இறுதியாக வான வேடிக்கைகள் முழங்க பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

Murugan

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல், ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள பிரசித்தி பெற்ற வேலாயுத சுவாமி கோவிலில் கடந்த 26ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.