"பட்டாசு சில்லறை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்" - அரியலூர் ஆட்சியர்!

 
collector ariyalur

அரியலூர் மாவடடத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு சில்லறை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும் இருப்பு வைத்துக்கொள்ளவும் தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி உரிமத்தினை பெறுவதற்கு தங்களது  விண்ணப்பத்தினை செப்.1 முதல் செப். 30 வரை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புலவரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டுக்காட்டும் புலவரைபடம். 2.உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுமதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல்.

crackers

3.வாடகை கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/- அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். 4. மனுதாரரின் பாஸ்போர்ட் வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை) 

மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பம் செய்யுமாறும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால்  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.