கோவையில் ஈச்சர் வேன் மீது பைக் மோதல் - இளைஞர் பலி!
கோவை கே.ஜி.சாவடி அருகே முன்னால் சென்ற ஈச்சர் வேனின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் வெற்றி விஜயன்(37). இவர் கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற விஜயன், பணி முடிந்து மாலை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். கே.ஜி.சாவடி அருகே சென்றபோது முன்னால் கேஸ் ஏற்றிச்சென்ற ஈச்சர் வேனின் ஓட்டுநர் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி வானத்தை நிறுத்தியுள்ளார். இதனை எதிர்பார்க்காத வெற்றி விஜயன் தனது வாகனத்தை நிறுத்த முயன்ற நிலையில் எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் ஈச்சர் வேனின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்ட வெற்றி விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார், விபத்தில் பலியான வெற்றி விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈச்சர் வேன் ஓட்டுநர் சம்பத்குமார் என்பரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.