பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு... நீர்மட்டம் 93.10 அடியாக உயர்வு!

 
bhavanisagar

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக உயர்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை நீடிப்பதால் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 1 வாரத்தில் 8 அடி உயர்ந்துள்ளது. 

bhavani sagar

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20,449 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 1,005 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில், நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும். 

இதனிடையே, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 33.37 அடியாக (மொத்த கொள்ளளவு 33.50 அடி)  உள்ளது. இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாகவும், 30.84 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.90 அடியாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்