105 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை!

 
bhavanisagar

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 105 அடியை நெருங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த அணையின நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 

bhavani

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 622 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக வினாடிக்கு 300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100  கனஅடியும் என மொத்தம் 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருவதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 105 அடியை நெருங்கியதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும் என பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.