பல்லடம் அருகே பனியன் கம்பெனி தொழிலாளி படுகொலை - போலீசார் விசாரணை!

 
Murder

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பனியன் கம்பெனி தொழிலாளி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இளைஞர் ஒருவர், ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

palladam

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையான நபர் பல்லடம் அடுத்த அருள்புரம் செந்தூரான் காலனியை சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்(36) என்பதும், தனியார் பனியன் கம்பெனி ஊழியரான இவருக்கு  சுசீலா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து, கோபால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.