ஊத்தங்கரை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை... கிருஷ்ணகிரி எஸ்பி நேரில் விசாரணை!

 
uthangarai

ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி. இவரது மகன் கலிகண்ணன் (45). இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கலிகண்ணன் கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கு செல்லாமல் உயிருக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரஷர் நிறுவனம் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் கலிகண்ணன் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

uthangarai

இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்  பேரில், ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின், காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொலையான கலிகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், கொலை நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

murder

இந்த கொலை சம்பவம் குறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கலிகண்ணனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்று, சடலத்தை வேப்பாலம்பட்டி பகுதியில் போட்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, கலிகண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.