ஈரோட்டில் ஆளுநர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது!

 
governor

ஈரோட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித் தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்த 22 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மற்றும் தலைவர்களை பற்றி பேசாமல் புறக்கணித்ததோடு, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். மேலும், ஆளுநரின் பொங்கல் பண்டிகை தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் முத்திரையை புறக்கணித்தோடு, தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆளுநரை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. 

governor

இந்த நிலையில், ஈரோட்டில் ஆளுநரின் கொடும்பாவி எரிக்கப்படும் என சில அமைப்பினர் தெரிவித்ததால், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தலைவர்களின் சிலைகள், காளைமாட்டு சிலை மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் கல்லூரிகள் முன்பாகவும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடு அருகே நேற்று ஆதித்தமிழர் பேரவையினர், ஆளுநர் உருவ பொம்மையை எரிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூரம்பட்டி நான்கு ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது, ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 22 நிர்வாகிகள் திரண்டு வந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அவர்களை தடுத்து உருவ பொம்மையை பறித்தனர். இதனால் அவர்கள் ஆளுநரின் படத்தை எரிக்க முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து,  அவர்கள் காவல்துறை வானில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.