ஸ்ரீரங்கம் தனியார் விடுதியில் ஆந்திர இளைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை!

 
dead

திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் விடுதியில் ஆந்திர மாநில இளைஞர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரகாஷ் (26). இவர் கடந்த 17ஆம் தேதி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இதனிடையே, ஷியாம் பிரகாஷை காணாததால் அவரை தேடி உறவினர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் ஷியாம் பிரகாஷின் அறைக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

police

அதன் பேரில், போலீசார் விடுதி அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, ஷியாம் பிரகாஷ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.