நண்பர் இறந்த வேதனையில் முதியவர் பேருந்து முன் விழுந்து தற்கொலை... திருப்பூரில் சோகம்!

 
tiruppur

திருப்பூரில் நண்பர் இறந்த வேதனையில் முதியவர் தனியார் பேருந்தின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(75). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரும் நாள்தோறும் நடைபயிற்சி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.  இந்த நிலையில், கடந்த வாரம் சுப்பிரமணியின் நண்பர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். நெருங்கிய நண்பர் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். எனினும் அவர் சோகத்துடன் காணப்பட்டு வந்துள்ளார்.

tirupur Gh

இந்த நிலையில், நேற்று காலை சுப்பிரமணி மன்னரை பகுதியில் உள்ள திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த வழியாக வந்த தனியார் பேருந்தின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான தற்கொலை சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.