திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... காஞ்சிபுரம் அருகே சோகம்!

 
fire accident

காஞ்சிபுரம் அருகே திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கன்னடியன் குடிசை பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் ரஞ்சித்குமார்(36). இவர் வாலாஜாபாத் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்டம் ரஞ்சப்ப கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த  சூர்யா(34) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் சூர்யா மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

kanchipuram

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி கணவர் வீட்டில் இருந்த சூர்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரது கணவர், சூர்யாவின் வீட்டிற்கு செல்போனில் தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யாவின் தந்தை ரவிச்சந்திரன் தனது மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார், தற்கொலை செய்து கொண்ட சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 5 ஆண்டுகளில் சூர்யா உயிரிழந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, சூர்யாவின் கணவர் வீட்டினரிடம் விசாரித்து வருகிறார்.